முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் செய்யாதே என் கணவா !

காதல் செய்யாதே என் கணவா, தீராத காதல் செய்..

இளமையின் மொத்தமாய் என் கண்கள் எழில் தொடுக்க, அதில் பித்தாகி நீ மூழ்கி எனை காதல் செய்யாதே என் கணவா..

துயர்படும் தருணங்களில் எல்லாம் துளிர்விட்டு எழும் கண்ணீர்த் துளிகளை உன் கரங்களால் நீயள்ளி உன் உயிர் ஊற்றி எந்தன் துயர் மாற்றும் காதல் செய் . .


இளமை துள்ளும் சோலையாய் கனவுகளின் வாழ்விடமாய் கனிந்து நிற்கும் என் மனதினை காதல் செய்யாதே என் கணவா..

கனவுகளைத் தொலைத்த வெறுங்காடாய், வாழ்வியல்கள் விளையாடும் மைதானமாய், பொழுதொரு மாற்றமும் நொடிக்கொரு ஏமாற்றமுமாய் காணும் என் மனத்தினை காதல் செய் . .


வெள்ளிக் கொலுசுகள் சறுக்கு மரமாடும் வாழைத்தண்டாய் செழித்து நிற்கும் என் மென் பாதங்களை காதல் செய்யாதே என் கணவா..

வாழ்வின் சுழற்சியால் வனப்பிழந்து வலிகள் தாங்கியதன் அடையாளமாய் வரிகள் தாங்கி நிற்கும் என் பாதங்களை காதல் செய் . .


பருவ வயதின் நெளிவுகளைப் பருகி உடல் மொய்க்கும் காதல் செய்திடாதே என் கணவா..

பிரசவித்து உடல் பருத்து வளைவுகளை நான் தொலைத்த பின்னும் என் தேகத்தை ஓயாமல் காதல் செய் . .


முதலாம் அத்தியாயத்தில் முத்தான வார்த்தைகளைக் கொத்தாக உதிர்க்கும் இருவரிக் கவிதையான என் செவ்விதழ்களை காதல் செய்யாதே என் கணவா..

அத்தியாயங்கள் பல கடந்தபின் விரக்தியில் நான் உதிர்க்கும் கடுஞ்சொற்களையும் கொஞ்சமும் சலிப்பின்றி அள்ளிக் காதல் செய்திடு என் கணவா காதல் செய்திடு .‌ .


வனப்புகளை காதல் செய்வது மட்டுமே உலக நியதியெனில் வா நியதிகளைத் தாண்டியொரு காதல் செய்வோம்‌ !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!