நிழலாடும் நிலவொளியில்,
முடிவில்லாது நீளும் இந்த முன்னிரவில்,
கயிற்றுக் கட்டிலில் உடலிட்டு தலை மட்டும் மெல்ல சாய்க்கிறேன் உன் மடியில்..
அன்றில் சுற்றித்திரிந்த ஜோடிப் புறா ஒன்று, தன் இணையுடன் காதல் கொள்ளும் கீச்சொலி கேட்டு, தலைதூக்கி காண்கிறேன் தென்னங்கீற்றுகள் தாண்டிய பௌர்ணமி கற்றைகளை இழுத்துப் பற்றி பிரதிபலிக்கும் உன் முகத்தை..
மெலிதாய் நாசி நுழையும் மண் வாசம் மனம் வருட,
நாம் விரும்பி தொலையும் புத்தகமொன்றை கையில் கொண்டு, மறுகையால் என் கன்னம் கிள்ளிவிட்டு புத்தகத்தின் முதல் பக்கத்தை புரட்டுகிறாய் நீ..
நாணிய அந்த கன்னங்களில் என் கண்கள் முழுதும் படர விடாது, அடங்காமல் அங்குமிங்கும் ஆடித்திரியும் கூந்தலை உன் காதோரமாய் அடக்கிட முயல்கிறேன் நான்..
கண்கள் ரெண்டும் புத்தகம் விட்டு அகலாது, கழுத்தை மட்டும் ஒருவாறு சாய்த்து சிலிர்த்துக் கொண்டே சிரிப்பை புதைக்கிறாய் நீ..
இன்பமென இன்னும் ஏதேனும் இவ்வுலகினில் உண்டா என்ன? இவ்விரவினில் இதை விடவும் !!
கருத்துகள்
கருத்துரையிடுக