அத்தனை நெரிசல் தாங்கும் பேருந்திலும் அறியாதவள் தேகம் உரசிடாது நிற்கும் அவன் - கவிதை..
அருகேயவள் ஆடைத் திருத்தங்களில் அனிச்சையாய் திசை திரும்பும் அவன் - கவிதை..
அரவமற்ற தனிமை நெருக்கத்திலும் அத்துமீறா ஆளுமை காத்து நகைக்கும் அவன் - கவிதை..
ஆர்ப்பரிக்கும் ஊடல் பின்னே அரவணைத்து முத்த மிடும் அவன் - கவிதை..
வெளிப்படையாய் பேசிவிட்டு வெட்கப்படும் தருணங்களில் அவன் - கவிதை..
வேடவர் கை குத்துப்பட்டு வெள்ளந்தியாய் சிரிக்கையிலும் அவன் - கவிதை..
வெண்ணிலவை தள்ளி வைத்து பெண்நிலவை ரசித்திடுகையில் அவன் - கவிதை..
தோழியவள் தோள் சாய தொல்லையிடா கணங்களிலே அவன் - கவிதை..
தேநீர் நேரக் கதைகளிலே தேவதையவள் கண் திருடுவதில் அவன் - கவிதை..
சில்மிஷங்கள் செய்கையிலே சிணுங்கல்களில் லயிக்கையிலும் அவன் - கவிதை..
கனம் கூடிய கணங்களிலே கண்ணீரை மறைத்து விடும் அவன் - கவிதை..
பிணி தன்னை ஏந்தையிலும் பிடி தளர்த்தா நேசமிடும் அவன் - கவிதை..
பிஞ்சுவிரல் தீண்டிடுங்கால் பிள்ளையதன் சித்திரமாய் அவன் - கவிதை..
செல்ல மகள் வாடிடுங்கால், செத்து கணம் மீண்டிடும் அவன் - கவிதை..
பெற்றவனின் மனமறிந்து உள்ளமதை அடக்கிடுங்கால் அவன் - கவிதை..
உச்சி வெயில் வேளையிலும் மெய்வருத்தி கூலி பெறும் அவன் - கவிதை..
நட்டநடு சாமத்திலும் சாமியெனக் காத்திடுங்கால் அவன் - கவிதை..
சினங்கொட்டித் தீர்க்கையிலும் சீர் செய்து பார்க்கையிலும் அவன் - கவிதை..
பழைய சோறு தானுண்டு பழரசமதை பகிரையிலும் அவன் - கவிதை..
கால் கடுக்க நடை போட்டு உண்டியதை நிரப்பிடுங்கால் அவன் - கவிதை..
வாஞ்சையதை புதைத்தங்கே வலியதனில் மறத்துப்பின் வாய் மொழியும் அவன் - கவிதை . .
கருத்துகள்
கருத்துரையிடுக