எனக்கென நீ உதிர்க்கும் சொற்கள்..
எனக்கென மலரும் உன் இதழோரப் புன்னகை..
எனக்கென நீ சிரமத்தோடு சூடிக்கொள்ளும் அந்த சிறிய ஒப்பனை..
எனக்கென வெளிப்படும் உன் வெட்கம்..
எனக்கென கொட்டிடும் அந்தக் கோபம்..
எனக்கென நீ தந்து போன வலிகள்..
எனக்கென என்பதில் எல்லாம் நீ கஞ்சத்தனங்கள் செய்ததே இல்லை எப்போதும்..
எனக்கென என்பதுனக்கு
அத்தனை சுகம்,
அத்தனை பிரியம்,
அத்தனை பிடித்தம்..
உனக்கென என்பதை எல்லாம் என் எல்லாவற்றோடும் பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன் நான்..
மீண்டும் மீண்டும் இந்தக் காலம் ஒரு பாடலிலோ, ஒரு பெயரிலோ, ஒரு பேருந்திலோ, ஒரு இரவிலோ உன்னை என்னிடம் சேர்த்து விடுகிறது எனக்கென..
அதே காலம் என்னிடமிருந்து உனக்கென எதுவும் சேர்த்ததா ??
பதில் வேண்டாம்..
ஒரே ஒரு பொய் சொல் அது போதும் இப்போதைக்கு எனக்கென !!
கருத்துகள்
கருத்துரையிடுக