இதனோடு சேர்த்து பத்தாவது வீடு எங்களுக்கு..
முன்பிருந்த வீடுகளின் சாயலில் தான் இந்த வீடும் இருக்கிறது..
குழப்பத்தில் அதிர்ஷ்டம் எந்த வீட்டின் கதவுகளை தட்டியதோ தெரியவில்லை..
வாடகை ஏற்றத்தால்,
வேலை மாற்றத்தால்,
உயர் படிப்பு நோக்கத்தால்,
ஆணி அடித்ததால்,
அடுப்பங்கரை சுவற்றில்
படிந்து போன புகையால் என
மாறுபடுகின்றன வீடுகள்,
மாற்றலுக்கான சூழல்களும்..
கரித்துண்டில் கிறுக்கி
கணக்கு படித்தது ஒரு வீடு..
பக்கத்து வீட்டின் மரம் ஏறி மாங்காய் திருடி மாட்டிக் கொண்டது மறு வீடு..
வண்டியோட்ட கற்றுக்கொள்வதாய்
முழங்கால் முழுதும் தேய்ந்து
முடங்கிக் கிடந்தது,
இறுதியாக உடனிருந்து இல்லாமல் போனவனின் இருமல் சத்தம் விட்டு விட்டு ஒலித்தது என ஒவ்வொன்றும் ஒரு வீடு..
விவரமறிந்த நாளிலிருந்து
விட்டுப் பிரிந்தது ஏராளம்..
அத்தனைப் பொருளையும்
வாகனத்தில் ஏற்றிய பின் அதன் உச்சியில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் கையசைத்து அழைப்பேன் வரமாட்டேன் என
வம்பிழுக்கும் நினைவுகள் மட்டும் . .
கருத்துகள்
கருத்துரையிடுக