சுற்றிலும் நான்கு சுவர்,
அடைக்கப்பட்ட சாளரங்களும், கதவும்..
உத்திரத்தில் ஓயாது ஓடும் மின்விசிறி, மன ஓட்டத்தைத் தாண்டி செவிகளில் அதன் இரைச்சல், நிறுத்திவிட்டேன்..
நிற்க நேரமின்றி எங்கோ விறுவிறுப்பாக நடந்து கொண்டே இருந்தது கடிகாரம், பேட்டரியை கழற்றி வீசிவிட்டேன்..
ஏதோ ஒரு மூலையில் என்னைப் பார்த்து எகத்தாளமாய் சிரித்தபடி ஒளிரும் அலைபேசி,
திரையில் தெரிவது உன் பெயர் இல்லையெனினும் திராணியற்று நகர்கிறேன் அதை நோக்கி..
வீம்பாகவே இருக்கிறேன் அல்லது முயல்கிறேன்,
இருப்பினும் அவ்வப்போது திறந்துக் கொள்ளும் கண்களின் குழாய்களை மூட பதினோராவதாய் உன் விரலின்றி சிரமப்படுகிறேன்..
இருந்தும் இப்போது தான் நிம்மதியாய் இருக்கிறோம் என்பதாய் ஓர் உணர்வு,
நானும்,
நீ தந்து போன இத் தனிமையும் !!
கருத்துகள்
கருத்துரையிடுக