பல்லாங்குழி ஆடயில
ஆடையில ரத்தமுன்னு
வீட்டோட அடச்சிட்டாளே
என்னப் பெத்த என் ஆத்தா..
பனையோலை பங்களால
பத்திரமா புடிச்சு வச்சு
போட்டோவுக்கு சிரிக்கச் சொல்லி
அதட்டுனாளே அத்தைக்காரி..
என் வயசு சிருக்கியெல்லாம்
பள்ளிக்கூடம் போகையில
எம்மனசு நொந்த கதை
எங்க போயி நாஞ்சொல்ல..
கல்யாணம் வேணாம்னு
கண்ணீரோட நான் கெஞ்ச,
அந்த அருவாளு அய்யனாரும்
அதை காது குடுத்து கேக்கலையே கொஞ்சங்கூட..
சிரிக்கவே தெரியாத ஒரு
சிடுமூஞ்சி ஆம்பிள.
எனக்குன்னு எங்கப்பன்
பாத்து வச்ச மாப்பிள்ளை..
சீதனமா வாங்கி வந்த சாமான் எல்லாம்
என் புருசன் சரக்கடிச்சே
சேட்டுக்கடை போயி சேந்துருச்சு..
மஞ்சளுல மின்னுன
என் கன்னம் ரெண்டும்
மருதாணியா செவந்துருச்சு
வாக்கப்பட்ட மனுசன் கிட்ட
நான் வாங்குன அடி கண்டு..
கள்ளிக்காட்டுக்குள்ள பூத்த
கமலமலர் மாதிரி
வயித்தில் வந்து தரிச்சானே
என் மவன் கருவாயன்..
சட்டி சட்டியா கள்ளச்சாராயம்
குடிச்சதாலோ என்னவோ
சட்டுனு போய் சேந்தான்
என் புருசன் மகராசன்..
என் புருஷன் போய்ட்டானு
சோகத்துல நான் கெடந்தா
கருமாதிக்கு வாங்கி வச்ச
கந்து வட்டி யார் கட்ட ??
கருத்துகள்
கருத்துரையிடுக