அடியே குந்தவையே..
போதும் இதோடு நிறுத்திக்கொள் தயவுசெய்து..
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ வாழ்ந்தவள் நீ..
ஆயினும் ஏன் அடிக்கடி என் கனவில் வந்து போய் வதைக்கிறாய்..
வம்பு செய்து நீ விளையாட நானொன்றும் அந்த வந்தியத்தேவன் இல்லையே..
அவன் வழிந்துகொண்டு நின்றிருப்பான் பார் அங்கே வஞ்சியர்தம் வாசலிலே..
ஒரு வார்த்தை நீ கேட்டிருந்தால் உடனே கிளம்பியிருப்பேன், கழுதையை ஓட்டிக்கொண்டே சென்றிருப்பேன் அந்த கலிபோர்னியா வரையிலும் கூட..
எதற்கும் உதவாத அந்தக் குதிரையை ஓட்டிக்கொண்டு இலங்கை வரை போனதென, அந்தக் குரங்கை போய் விரும்பிவிட்டாய் எதுவும் யோசிக்காமலே..
சென்ற வழியெல்லாம் அவன் குதிரையை மட்டுமா ஓட்டினான்??
கேட்டுப்பார் பூங்குழலியிடம், கட்டுமரக் கப்பலில் அவன் கடலை போட்ட கதைகளை கடலளவு சொல்லுவாள்..
முடிந்த கதை நமக்கெதற்கு,
முற்றுப்பெற்ற பின் இனி பேசியும் பயனென்ன..
ஏதோ சில நாட்கள் எனக்கு முன்னதாய்ப் பிறந்துவிட்டாய் என்பதால் மட்டுமே விட்டுத் தந்து விட்டேன் அந்த வழிந்த தேவனுக்கு உன்னை..
இழந்து விட்டேன் என்ற கோபத்தில் ஏதும் செய்து விடுவேன் என்றெல்லாம் ஐயம் கொள்ளாதே..
எண்ணியது நடக்காது போனதை எண்ணி அண்டை வீட்டுக்காரனிடம் சண்டைக்கெல்லாம் போகமாட்டேன் நான்..
அதற்கு இங்கு அண்டை வீட்டுக்காரனும் இல்லை, அவனிடம் சண்டைக்கு போக நான் கரிகாலனாகவும் இல்லையே என்ன செய்ய !!
கருத்துகள்
கருத்துரையிடுக