தனியாகவே கடற்கரைக்கு செல்பவன் நான்.. அங்கு தனியாக அமர்ந்து அலைகளின் ஒசைக்கு மத்தியில் அந்த அஸ்தமனத்தை ரசிக்கிறவன் நான்..
தனியாக ஒரு காஃபி போட்டு அதை தனியாகவே ருசித்துக் குடிப்பவன்..
இரவில் இளையராஜாவை மட்டுமே துணைக்கு வைத்துக் கொள்பவன் நான்..
முதல் நாள் முதல் காட்சிக்குக் கூட தனியாகவே சென்று கூட்டத்திற்கு நடுவே கூச்சலிட்டுக் கொள்பவன் நான்..
அவ்வப்போது ஆழ்மனதின் அசைவிற்கேற்ப தனியாக நானும் எனது பைக்கும் என ஒரு நெடும்பயணத்திற்கு செல்பவன்,
உலகம் மறந்து ஒரு நெடும் தூக்கத்தில் ஆழ்பவன்..
உங்கள் யாராலும் என் உடன் வர முடியாவிட்டாலும் பரவாயில்லை,
தனியாகவே தனியாக இருந்துவிட்டுப் போகிறேன் நான்..
"தனியாகவா?"
"தனியாகப் போகிறாயா?"
என்று மட்டும் கேட்காதீர்கள்..
என் தனிமையின் பக்கத்தில் உங்களது அனுதாபம் வந்து அமர்ந்துகொள்வதை சகிக்க முடிவதில்லை இப்போதெல்லாம் என்னால்..
இப்படித்தான் நான்,
அவ்வப்போது பேசிக்கொள்வேன் அதுவும் தனியாகவே,
கேட்டும் கேளாததுபோல் கிளம்பி விடுங்கள் !!
கருத்துகள்
கருத்துரையிடுக