பழைய உன்னைத்தான் எனக்குத் தெரியும்..
புதிய உனக்கு எதுவெல்லாம் பிடிக்கும்,
எதுவெல்லாம் பிடிக்காமல் போனதென தெரியாது எனக்கு..
புதிய உன்னிடம் எப்படி பேசுவதென்றே தெரியவில்லை எனக்கு..
பழைய உன்னிடம் பேசுவது போல
புதிய உன்னிடம் பேசலாமா என்று கூட தெரியவில்லை
பழைய உன்னின் பாதங்களை ஏற்றி தயக்கமின்றி நெஞ்சில் வைத்துக் கொள்ள முடிந்த என்னால்,
புதிய உன்னிடம் தன்மானத்தின் தயக்கங்கள் அதிகம் கொண்டு பின்வாங்குகிறேன்..
மீட்டுக் கொணரவே முடியாத ஆழத்தில்
இந்தக் காலத்தின் நடுவே தொலைத்து விட்டேன் உன்னை நான் எப்படியோ..
கிட்டவே இருந்தும் என் கையை கூட எட்டிப் பிடிக்க முடியாத தூரத்திற்கு நீயும் சென்றுவிட்டாய், நானும் விட்டுவிட்டேன் ஏனென்று தெரியாமலே..
அன்று அத்தனை ஆசை வார்த்தைகளால் அழைக்க முடிந்த அந்த உன்னை,
இன்று டி என்றழைத்ததற்கே
மன்னிப்பே கேட்கத் தோன்றுவதெல்லாம் காலத்தின் கோடூமையே அன்றி வேறென்ன..
ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன்,
நாம் நம்மை இனி கண்டுகொள்ளவே முடியாது தேவி!
கருத்துகள்
கருத்துரையிடுக