முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!
சமீபத்திய இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

யாரும் அறியாமல் நனைகிறேன்!

இதே ஊரில் இங்கே எங்கயோ தான் இதே மழையை நீயும் ரசித்துக் கொண்டிருக்கக்கூடும்.. ஒரு வேளை கொஞ்சம் நனைந்திருக்கக்கூட வாய்ப்புகள் நிறைய உண்டு.. ஆகவே தான் விடாமல் பெய்யும் இந்த நள்ளிரவு மழையில் நானும் என்னை நனைத்துக் கொண்டிருக்கிறேன் யாரும் அறியாமல்!!

மரணம் என்பது..

உடல் விட்டு உயிர் நீங்குவது தான் மரணம் என்று இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன் எல்லாரையும் போலவே நானும்.. ஆனால் கண்மணி, உண்மையில் மரணம் என்பது அதை விட எத்தனை கொடுமையானது!!

இப்படிக்கு, எங்கிருந்தோ ஓர் ஜன்னலோரவாசி!!

சொந்தமாய் ஒரு வீடு என்பதெல்லாம் பெரும்பான்மையானோரின் பேராசைக் கனவாகிப் போயிருக்கையில், ஒருவேளை கனவுகள் தாண்டி கற்கள் கொண்டும் வீடு கட்டுவதாக இருந்தால் தயவுசெய்து பெரியதொரு ஜன்னல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.. உங்கள் கேசம் கலைத்துப் போட்டு விளையாட காற்றோட்டம் அங்கிருக்கும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.. உங்களுக்கென ஒரு ஜன்னலோரம் இருப்பின் உலகின் எந்தவொரு துயரையும் நீங்கள் கடந்துவிடலாம் அல்லது மறந்துவிடலாம் என்பதற்கு, தாய் மடியென அதன் கம்பிகளில் தலை சாய்த்து தன்னைத் தொலைத்தோர் ஏராளம் சாட்சியுண்டு.. ஒரே ஒரு நிபந்தனை, அந்த ஜன்னலை சாத்திவிட்டு மீண்டும் திறப்பதற்கு முன் மனம் விட்டு அழுதிருப்பது மட்டும் முக்கியம்!!

அவள் கையெழுத்து!!

அங்குமிங்கும் அறைக்குள் எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கையில் சட்டென்று சிக்கியது அலமாரிக்குள் ஆழ்ந்து போன புத்தகம் ஒன்று.. புத்தகத்தை தூசு தட்டுகையில் எனக்குள்ளும் ஞாபகப் புழுதி கிளம்புகிறது மெல்ல.. தானாய்‌ கை தேடிச் சென்றடைந்த இடம் மூன்றாம் பக்கத்தில் காகிதத்தோடு காகிதமாய் பதிந்து போன அவளது கையொப்பம்.. கோணலான கையெழுத்து தான்‌‌ அவளுக்கு, அவளைப் போலவே அதுவும்.. இருந்தும் அச்சிட்ட‌ எழுத்துக்கள் கூட அவள்‌ பெயருக்கு அருகினில் நிற்க முடியாது.. எதையோ தேடத் தொடங்கிய நான் அவளின் அந்த கையெழுத்துக்குள் என்னை தொலைக்க தொடங்குகிறேன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக.. என்ன செய்யட்டும்.. சில விஷயங்களை எவ்வளவு முயன்றாலும் முற்றிலுமாக அழிக்கவோ, மறைக்கவோ முடிவதில்லையே.. எங்கு தேடிப் போய் நீங்கள் எப்படி ஒளிந்து கொண்டாலும் அந்த ஞாபகச் சிறகுகள் காற்றில் படபடத்துக் கொண்டே தான் கிடக்கின்றன!!