முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நான் கவிஞனான தருணம்😌

யோசித்துப் பார்க்கிறேன்.. மொத்தமும் கொட்டிப் போய் உனக்கே உனக்காகவெனவே மிஞ்சியிருந்த அந்த ஒற்றைப் பூவை, சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, பாதங்கள் ஒருசேர உயர்த்தி எட்டிப்பறிக்க நீ எத்தனித்த அத்தருணத்தை அருகாமையில் நின்று தரிசித்த அந்த நேரத்தில் தான், நிச்சயம் நான் கவிஞனாகியிருக்க வேண்டும்!!

அதுவே பெருந்துயரம்!!

யாரையாவது காதலிப்பது என்பது ஒரு ஆறுதல்.. யாரையும் காதலிக்காமலிருப்பது ஒரு வகை நிம்மதி.. யாராலாவது நாம் காதலிக்கப்பட்டோம் அல்லது காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது பெரும்போதை.. யாராலும் இறுதிவரையில் காதலிக்கப்படாமல் போவதுதான் கடுந்துயர்!!

புடவை அணிந்த பட்டாம்பூச்சி🦋💙

ஆண்டு முழுதும் சுடிதார் தேவதையாய் சுற்றி திரிந்த அவளுக்கு, திடீரென ஓர் ஆசை துளிர்விட்டது கடைசி நாளில் புடவை பட்டாம்பூச்சியாய் கல்லூரியை சுற்றிவர.. அலமாரி முழுதும் அரை நாள் தேடித் தேடி தேர்ந்தெடுத்ததில் அம்மாவின் புடவை ஒன்று மயில் கலரில் மாட்டியது.. அதில் ஆரம்பம் எது முடிவு எது என தெரிந்து கொள்ளவே அரை நேரம் தீர்ந்து போயிருந்தது.. அம்மாவின் உதவியோடு அதை ஒருவழியாய் அணிந்து முடிக்கவே அரை யுகம் ஆகிப் போன நிலையில், புடவையை அவள் அணிந்து கொள்ள அழகோ அவளை அள்ளிப் பூசிக் கொண்டிருந்தது.. இடை தெரியாமல் மறைக்க தேடினாள் காப்பூசி ஒன்று.. மறு பிறவியென்றால் எப்படியாவது காப்பூசியாய் பிறக்க கடவுளிடம் வேண்டி கொண்டிருந்தது அவள் வீட்டு கண்ணாடி.. கல்லூரி வாசலை நெருங்க நெருங்க வார்த்தைகள் இதழ் நழுவ, இடை நழுவிய புடவையை இழுத்து பிடித்தது பூவை அவளின் விரல்கள்.. இல்லாத இடையை வேறு வழியின்றி இறுக்கி பிடித்து கொண்டது அந்த புடவையின் விரல்கள்.. சிறகை மறந்த அந்த வண்ணத்துப்பூச்சி புடவை அணிந்து பொறுமையாக வாசலோரம் வலம் வருவதை காணும் வரை, கல்லூரியின் கடைசி நாளை எண்ணி எந்த ஆணும் வருத்தப்பட்டதாய் தெரியவில்லை!!

வக்கற்றவர்கள் தானே நாம்!!

ஆயுள் முழுவதுக்குமான அன்பும், ஆசைதீர காதலும், அடிக்கடி அணைத்துக் கொள்ள அவனும் அல்லது அவளும், இதெல்லாம் வேண்டும் தான் எல்லோருக்கும்.. ஆனால் குறைந்தபட்சமாக ஒரு நாளாவது நம்மை மறந்து நாம் உறங்கிப் போகும் வரை அலுக்காது தலை கோதிவிடும் ஒரு கை! அதற்கு கூட வக்கற்றவர்கள் தானே நம்மில் பலரும்!!

நானாக கூட இருந்திருக்கலாம்!!

உச்சி வெயிலில் உள்ளங்கால் நனைக்கும் வியர்வையில், பாலைவன தேசத்துக்காரன் போல வறண்ட கண்களோடு வாழ்ந்து வெறுத்த நடையோடு, கையில் Certificate File உடன் கண்ணெல்லாம் தீராத கனவுகளோடு, எவனோ ஒருவன் வேலை தேடி அலைந்து திரிவதை நகரத்தின் எங்கோ ஒரு மூலையில் நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால், யாருக்குத் தெரியும்.. அது நானாக கூட இருந்திருக்கலாம்!!

ஆதித்த கரிகாலன் எனும் காதல் பித்தன்!

எத்திசையும் நடுங்கிட ஒத்தையிலே போர் புரிந்து, பல தலைகளை கொய்து வந்தவன் அவன்.. ஏனோ வெள்ளைப் பூ அவளின் மீளா மாய வலையில் சிக்கி, காதல் பித்தம் மொத்தமாய் தலைக்கேறி, தலை பிய்த்துக் கொண்டு, பித்தம் நித்தம் குறைய வேண்டி, கள்ளும் பாட்டும் இரத்தமும் சதையும் எனக் கேட்டவன் இப்போது, காஞ்சியிலே நிற்கிறான் எஞ்சிய அவளின் கொஞ்சம் நினைவுகளோடு! அவளால் உயிர் விட்டான் என்பது மன்னனின் வரலாற்றில் விழுந்த மண் என ஊர் தூற்றினாலும், அவளால் உயிர் விட்டான் என்பதுவே அவனது இத்தனை ஆண்டு காலத்தின் இறுதிபட்ச இன்பமாயும் ஆறுதலாயும் இருந்திருக்கும் அவனுக்கு!!

அவள் நினைவுக்கு மட்டும்..

அத்தனை சுனாமி உள்வைத்துக் கொண்டு, அமைதியாய், அலைகளாய் ஆரத்தழுவி ஈரம் செய்து அனாதியாய் நீண்டு கரை கிடப்பதெல்லாம்.. அவள் நினைவுக்கும் அந்தக் கடலுக்கும் மட்டுமே பொருந்தும்!!