காதல் செய்யாதே என் கணவா, தீராத காதல் செய்.. இளமையின் மொத்தமாய் என் கண்கள் எழில் தொடுக்க, அதில் பித்தாகி நீ மூழ்கி எனை காதல் செய்யாதே என் கணவா.. துயர்படும் தருணங்களில் எல்லாம் துளிர்விட்டு எழும் கண்ணீர்த் துளிகளை உன் கரங்களால் நீயள்ளி உன் உயிர் ஊற்றி எந்தன் துயர் மாற்றும் காதல் செய் . . இளமை துள்ளும் சோலையாய் கனவுகளின் வாழ்விடமாய் கனிந்து நிற்கும் என் மனதினை காதல் செய்யாதே என் கணவா.. கனவுகளைத் தொலைத்த வெறுங்காடாய், வாழ்வியல்கள் விளையாடும் மைதானமாய், பொழுதொரு மாற்றமும் நொடிக்கொரு ஏமாற்றமுமாய் காணும் என் மனத்தினை காதல் செய் . . வெள்ளிக் கொலுசுகள் சறுக்கு மரமாடும் வாழைத்தண்டாய் செழித்து நிற்கும் என் மென் பாதங்களை காதல் செய்யாதே என் கணவா.. வாழ்வின் சுழற்சியால் வனப்பிழந்து வலிகள் தாங்கியதன் அடையாளமாய் வரிகள் தாங்கி நிற்கும் என் பாதங்களை காதல் செய் . . பருவ வயதின் நெளிவுகளைப் பருகி உடல் மொய்க்கும் காதல் செய்திடாதே என் கணவா.. பிரசவித்து உடல் பருத்து வளைவுகளை நான் தொலைத்த பின்னும் என் தேகத்தை ஓயாமல் காதல் செய் . . முதலாம் அத்தியாயத்தில் முத்தான வார்த்தைகளைக் கொத்தாக உதிர்க்கும் இருவரிக் கவிதைய...