முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நான் மற்றும் நான் மட்டுமே !!

தனியாகவே கடற்கரைக்கு செல்பவன் நான்.. அங்கு தனியாக அமர்ந்து அலைகளின் ஒசைக்கு மத்தியில் அந்த அஸ்தமனத்தை ரசிக்கிறவன் நான்.. தனியாக ஒரு காஃபி போட்டு அதை தனியாகவே ருசித்துக் குடிப்பவன்.. இரவில் இளையராஜாவை மட்டுமே துணைக்கு வைத்துக் கொள்பவன் நான்.. முதல் நாள் முதல் காட்சிக்குக் கூட தனியாகவே சென்று கூட்டத்திற்கு நடுவே கூச்சலிட்டுக் கொள்பவன் நான்.. அவ்வப்போது ஆழ்மனதின் அசைவிற்கேற்ப தனியாக நானும் எனது பைக்கும் என ஒரு நெடும்பயணத்திற்கு செல்பவன், உலகம் மறந்து ஒரு நெடும் தூக்கத்தில் ஆழ்பவன்.. உங்கள் யாராலும் என் உடன் வர முடியாவிட்டாலும் பரவாயில்லை, தனியாகவே தனியாக இருந்துவிட்டுப் போகிறேன் நான்.. "தனியாகவா?" "தனியாகப் போகிறாயா?" என்று மட்டும் கேட்காதீர்கள்.. என் தனிமையின் பக்கத்தில் உங்களது அனுதாபம் வந்து அமர்ந்துகொள்வதை சகிக்க முடிவதில்லை இப்போதெல்லாம் என்னால்.. இப்படித்தான் நான், அவ்வப்போது பேசிக்கொள்வேன் அதுவும் தனியாகவே, கேட்டும் கேளாததுபோல் கிளம்பி விடுங்கள் !!

விதிகள் மூன்று !!

கிணறு ஒன்றை எட்டிப் பார்க்க எண்ணினால் அதற்கான மூன்று விதிகள்.. முதலில் எட்டிப் பார்க்கும்போது தவறி உள்ளே விழுந்து விடாதிருப்பது முக்கியம்.. அப்படியே விழுந்து விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக அக்கிணறு உங்களை விழுங்கி விடுவதற்குள் சுதாரித்துக் கொண்டு வெளிவந்து விடுவது இரண்டாவது விதி.. முக்கியமானதும் மூன்றாவதும் அதை உற்று பார்க்கும்போது உண்டாகும் காட்சி மயக்கத்தில் உங்களை நீங்கள் இழக்காமலிருத்தல் மிக மிக அவசியம்.. அன்பு செலுத்துவதற்கான மூன்று விதிகளும் அவையேதான் !!

இவை போதும் !!

என்னைத் தொலைக்க ரொம்பலாம் நீங்கள் மெனக்கெட வேணாம்.. சிறு அலட்சியம், கொஞ்சமே கொஞ்சம் நிராகரிப்பு இவை மட்டுமே போதும் !!

ஊசலாடுகிறது மனது !!

இச்சை பேச்சென்றால் நீள்கின்றன நிமிடங்கள்.. மிச்சப்படி வேறு பேச்சென்றால் ஏனோ நொடிகளாகவே நீண்டு நொடிந்து போகின்றன.. காதலா? காமமா? கடிகாரத்தின் பெண்டுலமாய் ஊசலாடுகிறது மனது !!

குந்தவை எனும் தேவதை!!

அடியே குந்தவையே.. போதும் இதோடு நிறுத்திக்கொள் தயவுசெய்து.. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ வாழ்ந்தவள் நீ.. ஆயினும் ஏன் அடிக்கடி என் கனவில் வந்து போய் வதைக்கிறாய்.. வம்பு செய்து நீ விளையாட நானொன்றும் அந்த வந்தியத்தேவன் இல்லையே.. அவன் வழிந்துகொண்டு நின்றிருப்பான் பார் அங்கே வஞ்சியர்தம் வாசலிலே.. ஒரு வார்த்தை நீ கேட்டிருந்தால் உடனே கிளம்பியிருப்பேன், கழுதையை ஓட்டிக்கொண்டே சென்றிருப்பேன்‌  அந்த கலிபோர்னியா வரையிலும் கூட.. எதற்கும் உதவாத அந்தக் குதிரையை ஓட்டிக்கொண்டு இலங்கை வரை போனதென, அந்தக் குரங்கை போய் விரும்பிவிட்டாய் எதுவும் யோசிக்காமலே.. சென்ற வழியெல்லாம் அவன் குதிரையை மட்டுமா ஓட்டினான்?? கேட்டுப்பார் பூங்குழலியிடம், கட்டுமரக் கப்பலில் அவன் கடலை போட்ட கதைகளை கடலளவு சொல்லுவாள்.. முடிந்த கதை நமக்கெதற்கு, முற்றுப்‌பெற்ற பின் இனி பேசியும் பயனென்ன.. ஏதோ சில நாட்கள் எனக்கு முன்னதாய்ப் பிறந்துவிட்டாய் என்பதால் மட்டுமே விட்டுத் தந்து விட்டேன் அந்த வழிந்த தேவனுக்கு உன்னை.. இழந்து விட்டேன் என்ற கோபத்தில் ஏதும் செய்து விடுவேன் என்றெல்லாம் ஐயம் கொள்ளாதே.. எண்ணியது நடக்காது போனதை எண்ணி அண்டை வீ...

அதுதான் பிரச்சனையே !!

இருக்குற எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கும்.. அது என்னன்னா, நல்லா சாப்பிட்டு தூங்குறது.. ஆனா அதுலயும் ஒரு பிரச்சனை இருக்கு.. அது என்னன்னா சாப்பாடு இல்லைங்கறது தான் !!

நினைவுகள் போதும் எனக்கு !!

'தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற வள்ளுவன் வாக்கை மீண்டும் மீண்டும் எவரும் நினைவுப்படுத்தத் தேவையில்லை எனக்கு.. எந்த இதழின் அட்டைப்பக்கத்திலும் என் படங்கள் இடம்பெறத் தேவையில்லை.. எந்த தொலைக்காட்சி தலைப்புச் செய்தியிலும் நான் வரப் போவதில்லை.. உலகின் சாதனைப் புத்தகங்களில் என் பெயர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. இத்தனை பெரிய பூமியில் நானும் சற்றே இருந்துவிட்டு போகிறேனே ஏதோவொரு மூலையில்.. சில இதயங்களின் பாரங்களை இறக்கி வைத்த நினைப்புகள் போதுமெனக்கு எப்போதும் !!