முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரவிலும் அதன் இசையிலும் நீ !!

நானே சேகரித்து கொண்ட உன் பொருட்கள், உன் பரிசுகளாலேயே நிரம்பிப் போன என் அறை அலமாரிகள், உன்னிடமிருந்து திருடிக் கொண்ட உன்னுடையதும், நமக்காய் நாம் எடுத்துக் கொண்டதுமாய் பழைய புகைப்படங்கள்‍, உனக்குப் பிடித்த இடங்கள், உன் ரிங்டோன், உன் உடை வாசம், உன் பெயர் என இவையேதும் உனை நினைவுபடுத்தினால் கூட பரவாயில்லை எனக்கு.. யாரோ யாரையோ நினைத்து எழுதி வைத்த பாடல் வரிகளுக்கும், எவரோ எதற்கோ மீட்டிய வயலினுக்கும், பியானோவுக்கும் இரவெல்லாம் உனை நினைத்து உறக்கமின்றி தலையணை நனைய நான் கண்ணீர் வடிப்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை எனக்கு !!

காதல் பிரிவு...

என்ன செய்துவிடப் போகிறது ஒரு பிரிவு பெரிதாய் ?? கண்ணெட்டா தொலைவிற்கு தூரம் தள்ளி வைக்கும்.. பேசிக் கொள்ள வேண்டாவென்று வார்த்தைகள் துண்டித்து மௌனத்தில் சிறை வைக்கும்.. கொட்டிடும் மழையில் குடைக்குள்ளே நனைய முடியாதபடி அடைத்து வைக்கும்.. சத்தமேயின்றி முத்தமிட்ட நினைவுகளைக் கிளறிக் காட்டி சத்தம் போட்டு அழ வைக்கும்.. விடியா வானம் பார்த்து விடிய விடிய கதை பேசி கதைத்திட தடை விதிக்கும்.. அவ்வளவுதானே.. காதல் இதுதான் என நாம் கண்டறியும் முன்னரே உன்னுள் கலந்த என்னையும், என்னுள் கலந்திட்ட உன்னையும் இந்தப் பிரிவு என்ன செய்திடப் போகிறது.. இந்தப் பெரும் காதலை இந்தப் பிரிவு என்ன செய்து விடப் போகிறது . .

யாரோ போல் நீ !

உன்னைப் பார்த்துவிட்டு யாரோ போல் கடந்து செல்லும் கணங்களில் எல்லாம், முன்பு ஒருமுறை அதே சாலையில் என் கை விரல்களை நீ இறுக கோர்த்த போது துடித்ததை விட இருமடங்காகிறது இதயத்துடிப்பு.. இப்போது பற்றிக்கொள்ள, ஊடல் கொள்ள, மகிழ்நதிருக்க, கதறியழ என்னிடம் எஞ்சியிருப்பதெல்லாம் உன் நினைவுகள் மட்டுமே.. முதலும் இறுதியுமாய் உன்னை மறந்து போக முடிவெடுத்து நான் உறங்கச் சென்ற மிக நீண்ட இரவுகளை எல்லாம் கடந்து செல்ல நான் பட்ட பெரும்பாடு யாதென்பதை நீ அறிவாயா ? தட்டப்படும் கதவுகள் அனைத்தும் திறப்பதில்லை, கேட்கப்படும் அன்பு எல்லோரிடத்திலும் கிடைப்பதில்லை.. ஆனால் சிலுவைகள் மட்டும் காத்திருக்கின்றன, இப்படியான நினைவுகளை சுமந்து செல்ல !!

இன்னமும் ஏதோ ஒன்றில் நீ !!

வெகுதூரம் சென்று விடவில்லை நீ.. ஜன்னலோரம் திரும்பி மறைக்கும் கண்ணீர்.. நெஞ்சுத் தைக்கும் ஏதோ ஓர் பாடல்.. பிறர் பார்க்கும் முன் வீடு அடைத்து அழ வேண்டும் என வேகம் கூட்டும் நடை.. உன் பிறந்த நாளன்று தொண்டைக்குள் இறங்க மறுத்து, சிக்கிக்கொண்ட சோற்றுருண்டை.. நாம் நின்ற தேநீர் கடை முன் நடை தளர்த்தும் கால்கள்.. எனப் பல ரூபங்களில், வாழ்கிறாய் நீயும், வாழ்கிறது நம் காதலும், வாழ்கிறேன் நானும், மறந்தோ, நினைத்தோ, இறந்தோ, வாழ்ந்தோ . .

நிழல் உலகம்

எண்ணம் எல்லாம் எழுத்தாய் மாறுவதில்லை நிழலாய் போனவை பல.. நிழலாய் போன எழுத்துக்களுக்கு நிறமூட்ட நினைத்தால் காலம் அனுமதிப்பதில்லை.. வண்ணங்கள் பல இருந்தாலும் கருப்பு வெள்ளை கண்களுக்குள் அடங்கிப் போகும் அவையாவும்.. அடங்கிப் போன வண்ணங்கள் யாவும் வெளியேற முற்படுவதில்லை.. இதயவாசல் வந்த பல சொற்களுக்கு இதழ்வழி படியேற வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.. படிதாண்டா சொற்கள் படியேறினால் பல உறவுகள் நம் படியேறப்போவதில்லை.. முகமூடி அணிந்த முகங்களெல்லாம் உண்மை முகம் காட்டுவதில்லை.. உண்மைமுகம் கண்டால் தீண்ட முற்படுவதில்லை காற்றும் கூட.. உயர்ந்த உள்ளங்கள் என்றும் துயரங்களுக்கு தலைசாய்வதில்லை.. துயரங்களுக்கு தலைசாய்ந்தால் உயரம் தொட நேரமில்லை..

சாளரத்தோடு நீ !!

சாளரத்தின் ஓரத்தில் சாரல்களை ரசித்தபடியே நாட்கள் நகர்கிறது மெதுவாக மிக மெதுவாக.. கம்பிகளில் தேங்கி கழன்று விழும் துளிகளில் எல்லாம் உன்னைத் தேடியபடியே கடந்து போகின்றன என் கணங்கள் கனத்தபடியே.. கடைசித் துளி நீர் வற்றி விடுவதற்குள் நீ வந்துவிடுவாய் தானே !!

Blue tick பரிதாபம்..

அடிமனதின் ஆழம் தாங்காது மேலெழும்பி வரும் என் மன்றாடல்களையெல்லாம் ஒட்டுமொத்தமாய் ஒரு வார்த்தை விடாது கொட்டி எழுதி முடித்து, அதை கண்ணாடிக் குப்பி ஒன்றிலிட்டு கடலில் வீசியெறிந்து விட்டேன்.. எங்கோ தொலை தூரத்திலிருக்கும் உன்னை அது வந்து சேரும், நீ எனை மீட்க வருவாயென நம்பி இந்த தனித்தீவில் அமர்ந்திருக்கிறேன் தனியாக.. இங்கு பச்சை விளக்கு ஒளிரும்போதெல்லாம் என் மீட்புக் கப்பல் வந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு எட்டிப் பார்த்து பின் ஏமாந்து போகிறேன்.. இருந்தும் இன்னமும் கொஞ்சம் நம்பிக்கையோடு மீண்டும் பார்க்கிறேன், பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்.. இதோ என் தீவும் மூழ்கத் துவங்கிவிட்டது  மெது மெதுவாக.. எத்தனை முறை விளக்கு ஒளிர்ந்தாலும் என் கண்ணாடிக் குப்பியில் மட்டும் அந்த  எழவெடுத்த Blue tick விழுவதாக இல்லை !!

காலம்‌ ஒரு நல்ல எழுத்தாளன்..

பொழுது போகாவிட்டாலும் பொழுதுகள் போய்க் கொண்டு தான் இருக்கின்றன, போகத்தான் செய்கின்றன.. அலையற்ற ஆற்றில் சலனமே அற்று பயணித்து செல்லுமொரு இலையினைப் போல, முகில் வானின் முகட்டில் கைகள் அகல விரித்து அசைவே அற்று பயணிக்கும் அந்த வல்லூறைப் போல கடந்து போகின்றன சில பொழுதுகள் ஆதியும் தெரியாமல் அந்தமும் தெரியாமல்.. காலத்தின் கைகளை இறுகப் பற்றி ஓர் அங்குலமேனும் அதை இழுத்து நிறுத்திவிடவோ, ஓயாது ஓடிக்கொண்டே இருக்கும் அதன் கால்களுக்கு எது கொண்டேனும் அரை சாண் அளவிற்கேனும் குழிபறிக்கவோ முடியுமா என்ன நம்மால்? காலம் ஒரு நல்ல எழுத்தாளன்; நீயும் நானும் நல்ல வாசகர்கள்!!

அன்பின் அத்தியாயம்

ஏதோவொரு நாழிகையில் நிகழப் போகும் தன் உதிர்வை உணர்ந்த பிறகும், வேர் பாய்ச்சிய அம்மரத்தின் கிளையோடு கூடி, பூவாகி அவிழந்து பின் கனிகள் செய்வதில் தீர்க்கம் காட்டுகிறது இலை.. அன்பின் அத்தியாயங்களில் இதுவும் ஒன்று !!