முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இவை போதாதா !!

அடித்தொண்டை விரிய அண்ணாந்து பார்க்கையில் எல்லாம் வசீகரிக்கும் அந்த வானம், ஆளற்ற இந்த மாடிவெளியில் நானும் என் நாய்க்குட்டியும், அங்குமிங்கும் புத்தகத்தாளை புரட்டிப்போட்டு விளையாடும் காற்று, அமர்வதும் பறப்பதுமாய் அங்குமிங்கும் வட்டமடித்துக் கொண்டே ஒலியெழுப்பும் பறவையொன்று, குடித்து முடித்து பாதி காய்ந்த குளம்பிக் குவளை, கைநிறைய கொள்ளா அளவு கவிதை, இசையால் இதயம் நிறைக்க ராஜாவின் கீதம், போதாதா இவை? எப்போதும் உடன் பயணித்து உள்ளம் கிளறிப் பார்க்கும் இந்த வெறுமையை விரட்டியடிக்க !!

டாட்டூ போட ஆசைதான் !!

புதிதாய் மலர்ந்த ஒரு சிவப்புப் பூ பச்சைக் குத்தியிருந்தது பாட்டியின் கைகளில்.. குத்திய நினைவு இல்லை கொஞ்சம் கூட அவளுக்கு! எப்போதோ செத்துப்போன தன் நாய்க்குட்டியின் பெயரை பச்சை குத்தியிருக்கிறான் என் நண்பனொருவன்.. காதோரமாய் மறையும்படி காதலன் பெயரை குத்தியிருந்த தோழி, பிறகு அது அர்த்தமற்று‌ போற பெயரை பட்டாம்பூச்சி ஆக்கி விட்டாள்.. சாதுவான சக தொழிலாளி ஒருவன் கைகளில் முழங்கை வரை பெரிதாய் கழுகு ஒன்று கொடூரமாய் பார்த்தபடி.. கேட்டால் பார்த்த உடன் எல்லோருக்கும் பயம் வரணுமாம்! எனக்கும் கூட ஆசைதான் எதையாவது டாட்டூ போட்டுக்கொள்ள.. அந்த அளவுக்கு பிடித்த விஷயம் தான் இன்னும் தெரியவில்லை, கிடைக்கவுமில்லை !!

பெண் இருக்கும் வரை !!

சில நூறு கவிதைகளுக்குப் பிறகு வறண்ட பாலைவனமாய் தெரிகிறது மனம்.. அத்தருணத்தில் கடந்து செல்கிறாள் அரக்கு நிறப்புடவை அணிந்த பெண்ணொருத்தி.. அடை மழையாய் கொட்டித் தீர்த்தது ஓராயிரம் கவிதைகள்.. பின் உணராமல் என்ன செய்யும் இக்கவிஞன் மனம், பெண் இருக்கும் வரை எல்லாம் பெருங்கவிதைகள் வாழுமென !!

நானும் தனிமையும் !!

சுற்றிலும் நான்கு சுவர், அடைக்கப்பட்ட சாளரங்களும், கதவும்.. உத்திரத்தில் ஓயாது ஓடும் மின்விசிறி, மன ஓட்டத்தைத் தாண்டி செவிகளில் அதன் இரைச்சல், நிறுத்திவிட்டேன்.. நிற்க நேரமின்றி எங்கோ விறுவிறுப்பாக நடந்து கொண்டே இருந்தது கடிகாரம், பேட்டரியை கழற்றி வீசிவிட்டேன்.. ஏதோ ஒரு மூலையில் என்னைப் பார்த்து எகத்தாளமாய் சிரித்தபடி ஒளிரும் அலைபேசி, திரையில் தெரிவது உன் பெயர் இல்லையெனினும் திராணியற்று நகர்கிறேன் அதை நோக்கி.. வீம்பாகவே இருக்கிறேன் அல்லது முயல்கிறேன், இருப்பினும் அவ்வப்போது திறந்துக் கொள்ளும் கண்களின் குழாய்களை மூட பதினோராவதாய்‌ உன் விரலின்றி சிரமப்படுகிறேன்.. இருந்தும் இப்போது தான் நிம்மதியாய் இருக்கிறோம் என்பதாய் ஓர் உணர்வு, நானும், நீ தந்து போன இத் தனிமையும் !!

உறங்கித்தான் கிடக்கிறான்‌ புத்தன் !!

இளைத்தோ, களைத்தோ உலர்ந்தோ, வதங்கியோ கிழிந்தோ, இறந்தோ காற்றோடு வந்த பசுந்தழை, அம்மரத்தின் கீழ் சயனத்தில் இருக்கும் அவன் பாதத்தைத் தீண்டும் வரை, உறங்கித்தான் கிடக்கிறான் புத்தன் !

கடவுள் எனப்படுபவர் !!

உங்களை வருத்திக் கொண்டு ஏதேனும் செய்யச் சொல்கிறாரா.. உயிர் பலி கேட்கிறாரா.. உங்களின் மொழி தனக்கு விளங்காது என்கிறாரா.. நீங்கள் நினைத்தாலும் தொட முடியாத அளவில் இருக்கிறாரா.. அவருக்கென்று தனியாக ஒரு மெனு தயாரித்து வைத்துக்கொண்டு படையல் போடச் சொல்கிறாரா.. உங்களிடமிருந்து பிடுங்கி தன் சொத்துக்களை மட்டும் அவர் பெருக்கிக் கொண்டே போகிறாரா.. உங்கள் படுக்கையறையை நீங்களே அறியாது எட்டிப் பார்க்கிறாரா.. புரிந்து கொள்ளுங்கள், அல்லது முயற்சியேனும் செய்யுங்கள்.. கடவுள் எனப்படும் அவர், நிச்சயம் மனித சிந்தனையில் விளைந்த உயிர் பெற்ற ஒரு பொருளே !!

நீ மட்டுமே !!

சின்னதாய் ஒரு புன்னகைக் கூட எனக்கென்று நீ செய்யாத போதும்,  அங்கு நான்‌ நிற்பதை அறிந்தும் அறியாதது போல் என்னை நீ கடந்து சென்று விட்ட போதும், இன்னமும் என் காதல் மொத்தமும் உன் மீதே என்பதால், பைத்தியக்காரி என்கிறது என்னை இச்சமுதாயம்.. நீ அன்றே சொன்னது தான் நான் பைத்தியக்காரி என்று, இப்போது தான் தெரிந்திருக்கிறது இவர்களுக்கு.. இப்போதாவது உனக்கு புரிகிறதா ?? எப்பொழுதும் என்னை முழுமையாகப் புரிந்தவன் நீ.. நீ மட்டுமே !!

எங்கிருக்கிறாய் நீ ??

நீ தான்.. நீயே தான்.. நிச்சயம் அது உன் குரலே தான்.. அருவிகளுக்கு இடையில், அதிரும் ஆளற்ற நெடுஞ்சாலைகளில், ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசையில், பெருமழைக்குப் பிறகு வீசும் சாரலில், திருவிழாக் கூட்டத்தின் நடுவில், மனிதர்களை வெறுத்த பெரும்பாலான கணங்களில், நாம் சென்று வந்த இடங்களில், அனாதி தனிமையில், பாதி உறக்கத்தில் யாருமே அறியாது, என் உயிருக்கு மட்டும் கேட்கும்படி அழைக்கிறாய்.. தயவுசெய்து சொல்.. எங்கிருக்கிறாய் நீ ??                                      

கந்து வட்டி யார் கட்ட ??

பல்லாங்குழி ஆடயில ஆடையில ரத்தமுன்னு வீட்டோட அடச்சிட்டாளே என்னப் பெத்த என் ஆத்தா.. பனையோலை பங்களால பத்திரமா புடிச்சு வச்சு போட்டோவுக்கு சிரிக்கச் சொல்லி அதட்டுனாளே அத்தைக்காரி.. என் வயசு சிருக்கியெல்லாம் பள்ளிக்கூடம் போகையில எம்மனசு நொந்த கதை எங்க போயி நாஞ்சொல்ல.. கல்யாணம் வேணாம்னு கண்ணீரோட நான் கெஞ்ச, அந்த அருவாளு அய்யனாரும் அதை காது குடுத்து கேக்கலையே கொஞ்சங்கூட.. சிரிக்கவே தெரியாத ஒரு சிடுமூஞ்சி ஆம்பிள. எனக்குன்னு எங்கப்பன் பாத்து வச்ச மாப்பிள்ளை.. சீதனமா வாங்கி வந்த சாமான் எல்லாம் என் புருசன் சரக்கடிச்சே சேட்டுக்கடை போயி சேந்துருச்சு.. மஞ்சளுல மின்னுன என் கன்னம் ரெண்டும் மருதாணியா செவந்துருச்சு வாக்கப்பட்ட மனுசன் கிட்ட நான் வாங்குன அடி கண்டு.. கள்ளிக்காட்டுக்குள்ள பூத்த கமலமலர் மாதிரி வயித்தில் வந்து தரிச்சானே என் மவன் கருவாயன்.. சட்டி சட்டியா கள்ளச்சாராயம் குடிச்சதாலோ என்னவோ சட்டுனு போய் சேந்தான் என் புருசன் மகராசன்.. என் புருஷன் போய்ட்டானு சோகத்துல நான் கெடந்தா கருமாதிக்கு வாங்கி வச்ச கந்து வட்டி யார் கட்ட ??

பாதாளத்தின்‌ சாயல் உனது !!

கொப்பளிக்கும் கோபத்தை கருணையே இன்றி உன் மேல் நான் கொட்டிடும் போது, சலனமே இல்லாமல் அவற்றை அள்ளிக் கொண்டு ஏதும் நடக்காதது போல் நொடிகளை நீ கடத்திடும் போதெல்லாம்‍, ஆர்ப்பரித்து ஓடி வரும் அருவியினை அள்ளிக் கொள்ளும் பாதாளத்தின் சாயல் உனக்கு !!

ஆறடி நானும், அரை சாண் நீயும் !!

கிட்டத்தட்ட ஆறடி நான் இருந்தும் கிடந்து யாசிக்கிறேன் உன் அரை ஜான் காதலுக்காக.. குட்டையே அடையாளமாய் போன உனக்குத்தான் எத்தனை பெரிய உயரம் என் குட்டி இதயத்தில்.. எவராயிருப்பினும் தலைகுனியச் செய்யும் நீயும், எல்லோரையும் தலைநிமிரச் செய்யும் நானும் எப்படியும் ஆகச் சிறந்த ஜோடிகள் தானே? வளர்ந்தாலும் குற்றம் வளராமலிருந்தாலும் குற்றம்.. குற்றத்திற்கென வரையறைகள் அற்ற இவ்வுலகில் குற்றவாளிகள் நாமிருவரும் ஒரே சிறையில் வாடத்தான் யாசிக்கிறேன், வாழத்தான் நேசிக்கிறேன்.. தலைநிமிர்ந்தே பழகிய நீ ஒருமுறை வெட்கத்தில் தலைகுனி.. வாடக் காத்திருக்கும் வாடாமல்லியோடு உன் காதலைக் கவர குனிந்தே பழகிய நான் தலை நிமிர்கிறேன் உன் முன்னால் மண்டியிட்ட படி !!

என் பயம் அதுவே !!

என்றோ ஒருநாள் மீண்டும் உன்னை சந்திக்கத் தான் போகிறேன்.. அப்போதும் என்னிடம் நீ யார் என்பதில் எவ்வித காட்சிப்பிழையும் இருக்கப் போவதில்லை.. என் பயமெல்லாம் அன்றைய உனக்கு நான் யாராய் தெரிவேன் என்பதில் தான் !!

மழையில் அந்த மரத்தின் அடியில் !!

அந்த ஒரே மரம் மட்டும் தான், அந்த சாலையில் இருந்தது.. ஆள் நடமாட்டமும் இல்லை, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில்.. தூறல் எல்லாம் தான் தாங்கி, தனக்குக் கீழ் ஒதுங்கிய அந்த இருவருக்கும் இதத்தை தந்தது அம்மரம்.. மழைக்கால இருட்டு, மங்கிய வெளிச்சம், ஆடை நனைக்கும் இதமான தூறல் சொல்லவா வேண்டும், இருவரும் காதலில் தங்களை மறந்து லயித்துக் கொண்டிருந்தனர்.. மரத்தை சுற்றிச் சுற்றி ஓடுவதும், மாறி மாறி டூயட் பாடுவதும், உதடுகள் உரச கவிதை பரிமாறிக் கொள்வதும் எனக் கார்மேகக் காலத்தை கவிதையாக்கிக் கொண்டிருந்தனர்..  இப்போது தான் ஏழு வயது தொட்டிருக்கும் இருவருக்கும்.. இந்த வயசுக்கு இது கூட இல்லையென்றால் எப்படி.. மழை நின்றது ஒரு வழியாக.. கிளம்பிவிட்டார்கள் இருவரும், வழக்கம் போல புற்க்களை மேய !!